Monday, January 28, 2008

கம்யூனிஸ்டு என்ற பாசிஸ்டுகள் by செல்வன்

செல்வன் எழுதிய கட்டுரை - அவரது அனுமதியுடன் இங்கே சேமிக்கப்படுகிறது
இது பற்றிய விவாதங்களுக்கு அவரது பதிவை பார்க்கவும்.
Sunday, January 27, 2008
373.அழித்தொழிப்பு

செல்வன்



பாசிசம் என்பது எதிர்கருத்து சொல்பவனை அழித்தொழித்து அந்த கருத்தை அழிப்பது ஆகும். பாசிஸ்டுகள் எதிர்கருத்தை எப்போதும் வளரவிடுவதே இல்லை.எதிர்கருத்து கொண்டிருப்பவனை அழித்துத்தான் அவனது கருத்தை எதிர்கொள்வது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

பாஸிஸ்டுகளுக்கு வெளிப்பகையை விட உட்பகை அதிகமாக இருப்பது இதனால்தான்.பாசிசம் ஜெயிக்க ஒத்த சிந்தனை தேவை.ஒத்த சிந்தனை இல்லாதவன் எதிரி.ஒத்த சிந்தனையை திரிப்பவன் துரோகி.எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.துரோகியை எதிர்கொள்ளும் விதம் மரணம்தான்.துரோகத்துக்கு மரணம் தானே பரிசு?

எதிர்கட்சியில் இருக்கும்போது ஜனநாயக போர்வையில் இயங்கும் கம்யூனிசம் ஆளுங்கட்சியானதும் பாசிசமாக உருவெடுப்பது இதனால்தான்.20ம் நூற்றாண்டில் தோன்றிய முதல் பாசிச சித்தாந்தம் கம்யூனிச சித்தாந்தம்தான்.இந்த விதத்தில் லெனினும் ஸ்டாலினும் ஹிட்லருக்கும் முசோலினுக்கும் குருவை போன்றவர்கள்.மார்க்ஸின் காலத்தில் பேப்பரில் இருக்கும் ஒரு தத்துவமாக அறிமுகமான கம்யூனிசம் ஆட்சியை பிடித்ததும் பாசிசமாக உருவெடுத்தது.

கிடைத்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கம்யூனிசம் எதிர்கட்சிகளையும், மாற்று கருத்துக்களையும், தேர்தலையும், ஜனநாயகத்தையும் நிராகரித்தது. எதிர்க்குரலை அழிக்க வலிமையான ஆயுதம் ஒன்றை இந்த பாசிச அமைப்பு கையில் எடுத்தது.அது தான் அழித்தொழிப்பு.

பாசிசம் பீதியிலும், பயத்திலும் தான் இயங்கும்.சிறுகுழு ஒன்று ஆட்சியை பிடிப்பதும், அதை தக்க வைத்துகொள்வதும் பீதியின் மூலமாகத்தான் இருக்க முடியும்.அதனால் அழித்தொழிப்பு என்ற வன்மையான ஆயுதத்தை கம்யூனிசம் கையில் எடுத்தது.லெனினால் கையில் எடுக்கப்பட்ட அந்த ஆயுதம் அதன்பின் ஸ்டாலின், மாவோ, போல்பாட், கிம் டே ஜங் என்று கைமாறி போய்க்கொண்டே இருந்ததே தவிர கைவிடப்பட்டதில்லை.

நக்சல்பாரிகள் உலாவிய வங்கத்தில் பயத்துடன் உச்சரிக்கப்பட்ட அழித்தொழிப்பு என்ற ஆயுதத்தின் தந்தை லெனின்.ஆம்..ஆட்சியை பிடித்ததும் லெனின் செய்த முதல் காரியம் ரஷ்ய ஜார் நிக்கலசை அவரது பெண்டு பிள்ளைகளூடன்,குழந்தை குட்டிகளுடன் ஒட்டுமொத்தமாக அழித்தொழித்தது தான்.


(லெனினால் அழித்தொழிப்பு செய்யப்பட்ட சார் நிக்கலஸின் குடும்பம்)

ஆட்சியை பிடிப்பவர்கள் முன்னாள் ஆட்சியாளரை கொல்வது புதிதல்ல. கட்டபொம்மனை தூக்கிலிட்ட வெள்ளையர், சதாமை தூக்கிலிட்ட அமெரிக்கா துவங்கி பூட்டோவை தூக்கிலிட்ட ஜியா-உல்-ஹக் வரை அனைவரும் செய்த காரியம் தான் இது.ஆனால் ஆட்சியாளரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும், மனைவி, சிறுகுழந்தை உட்பட கொன்று குவிப்பதை பாசிஸ்டுகளை தவிர எவனும் செய்ததில்லை. சதாமை தூக்கிலிட்ட அமெரிக்கா இன்றும் அவரது குடும்பத்தினரை தொடவில்லை. ஒசாமாவின் மகன் இங்கிலாந்து பெண்ணை மணந்துகொண்டு ஆப்பிரிக்காவில் ஒட்டக ரேஸ் விடுவதை பற்றி கதைக்கிறார்.பூட்டோவை தூக்கிலிட்ட ஜியா -உல்ஹக் கூட பேனசிரை தொடவில்லை.

ஆனால் லெனின் இந்த வரம்புகளை எல்லாம் சர்வசாதாரணமாக மீறியவர். ட்சாரின் குழந்தைகளையும், மனைவியையும் சுட்டுக்கொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. முதல் முதலில் ரோமானோவ் அரச வம்சத்தின் மீது பாய்ந்த அழித்தொழிப்பு எனும் ஆயுதம் அடுத்து சொந்த கட்சியினர் மீது பாய்ந்தது.கம்யூனிசத்தை எப்படி உலகத்துக்கு பரப்புவது எனும் சித்தாந்த மோதல் ட்ராட்ஸ்கிக்கும், ஸ்டாலினுக்கும் ஏற்பட்டு அது உள்கட்சி சண்டையாக மாறி கடைசியில் அந்த விவாதத்தை முடித்து வைக்க அழித்தொழிப்பு எனும் கொடூர ஆயுதம் ஸ்டாலினால் பயன்படுத்தப்பட்டது. ஆம் ட்ராட்ஸ்கி ஆயுதம் தாங்கிய அடியாள் கும்பலால் கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார். இன்னமும் ஐரோப்பிய, அமெரிக்க இடதுசாரிகளால் கொண்டாடப்படும் நபர் ட்ராட்ஸ்கி.அவர் மீது அழித்தொழிப்பை பிரயோகிக்க ஸ்டாலின் எந்த தயக்கமும் காட்டவில்லை.

அழித்தொழிப்பு எனும் ஆயுதம் அடுத்து உக்ரேன், செசென்யா பொதுமக்கள் மீது பாய்ந்தது.கூட்டம் கூட்டமாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.அடக்குமுறைக்கு பணீய மறுத்த மக்கள் கூட்டம்,கூட்டமாக குலாக் எனும் கொட்டடிகளில் அடைகக்ப்பட்டு கொல்லப்பட்டனர்.ஸ்டாலின் காலத்தில் 10% ரஷ்யர்கள் இந்த குலாக்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.அதே சமயம் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் "ரஷ்யாவில் குற்றமே கிடையாது, ஜெயிலே கிடையாது" என்று புளுகித்திரிந்தனர். இன்றும் அந்த புளுகுகளை அள்ளி வீசும் காம்ரேடுகள் உண்டு.

உலகெங்கும் இளைஞர்களின் டீஷர்டுகளில் வீற்றிருக்கும் சேகுவேரா அழித்தொழிப்பை மிக தீவிரமாக நம்பியவர்.புரட்சியாளன் என்றால் யார், அவனை எது செய்யவேண்டும் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தை பாருங்கள்

"To send men to the firing squad, judicial proof is unnecessary...These procedures are an archaic bourgeois detail. This is a revolution! And a revolutionary must become a cold killing machine motivated by pure hate. We must create the pedagogy of the paredon (the execution wall)"

"மக்களை பயரிங் ஸ்க்வாடுக்கு அனுப்ப விசாரணை என்பதே வேண்டியதில்லை.நீதி விசாரனை என்பது பூர்ஷ்வா மனப்பான்மை.இப்போது நடப்பது புரட்சி.ஒரு புரட்சியாளன் வெறுப்புணர்வால் உந்தித்தள்ளப்பட்ட கொலைகார இயந்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.(புரட்சி வெற்றியடைய) சுவற்றின் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை நாம் அமுல்படுத்த வேண்டியது அவசியம்"

('சுவற்றின் மூலம் கல்வி' என்பது சுவற்றின் முன்னே நிறுத்தி பயரிங் ஸ்க்வாடால் சுட்டு கொல்வதை குறிக்கிறது)

ஆனால் சேகுவாராவின் எதிரிகள் அனைவருக்கும் இப்படி பயரிங் ஸ்க்வாடால் சுட்டுக்கொல்லப்படும் பாக்கியம் கிடைக்கவில்லை.அவர்களை சேரில் கட்டி வைத்து பிஸ்டலை கையில் எடுத்துக்கொண்டு அறை முழுக்க நடந்து சென்று அவனை திட்டியபடி, திடீரென பிஸ்டலால் அவன் தலையை சுட்டு மூளையை சிதறடிப்பது சேகுவேராவின் வழக்கம்.அப்போது சேவின் நண்பர்கள் அவரை சுற்றி நிற்பார்களாம்.

கொலையை கண்டு அஞ்சி நடுங்கும் நண்பர்களிடம் துப்பாக்கியில் கிளம்பும் புகையை ஊதி விட்டபடி சே அடிக்கும் வழக்கமான டயலாக் "லுக்..இதில் எல்லாம் முதலில் நீ கொல்கிறாயா அல்லது உன்னை அவன் கொல்கிறானா என்பது தான் கேள்வி"

கியூபாவில் அழித்தொழிப்பின் நாயகன் சேகுவேரா தான்.அதனால் தான் காஸ்ட்ரோ அவரை கியூபாவின் 'புகழ் பெற்ற' லா கபானா சிறையின் தலைமை எக்ஸிகுயூஷனராக நியமித்தார்லா கபானா சிறையில் கொல்லப்பட்டவர்கள் பலர் சேவின் முன்னாள் காம்ரேடுகள் தான்.அவர்கள் செய்த குற்றம் காஸ்ட்ரோ ஜனநாயகத்தை அமுல்படுத்துவார் என்று நம்பியதுதான்....கணக்கற்ற வர்க்க எதிரிகளை அந்த சிறையில் கட்டி வைத்து சுட்டுக்கொன்றிருக்கிறார் சே குவேரா..நீதியாவதி விசாரணையாவது? மூச்..

மாவோ இந்த ஆயுதத்தை விதவிதமான முறைகளில் பரிசோதித்தார்.அவரது ஆட்சியில் சுமார் பத்துகோடி சீனர்கள் மேல் இந்த ஆயுதம் பாய்ந்தது.அவரது சீடர்களான போல்பாட், கிம் டே ஜங் போன்றோர் கம்போடியா, வட கொரியா போன்ற நாடுகளில் கூட்டம் கூடமாக மக்களை கொன்று குவித்து, மண்டை ஓடுகளை அடுக்கி வைத்து இந்த ஆயுதத்துக்கு ஆயுத பூஜை போட்டனர்.

குறுங்குழுவாக இயங்கும் இந்திய மாவோயிஸ்டுகள் குண்டுவைப்பு, மிராசுதார்களை அழித்தொழித்தல் என்று இந்த ஆயுதத்தை பிரயோகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

Monday, January 14, 2008

கம்யூனிஸ்டுகளை அறிந்து கொள்வோம்.

1. சித்தாந்தத்திற்குச் சொந்தக் காரர்கள் என்று தம்மைப் பற்றிப் பீற்றிக் கொள்வார்கள். ஆனால் நியாயமான வாதங்களை முன்வைத்தால், அல்பவாதி, அசடு என்று தூற்றுவார்களே தவிர பதில் சொல்ல் மாட்டார்கள்.

2. விஞ்ஞான சோஷலிசம் என்று பிதற்றுவார்கள். மாறிவரும் விஞ்ஞானப் பார்வையில் புதிய கோட்பாடுகளும் , புதிய கண்டுபிடிப்புகளும் வந்து எப்படி பழைய கம்யூனிச சித்தாந்தங்கள் பொய்த்துப் போயின என்று விளக்கிச் சொன்னால் அது பற்றி மூசு விடமாட்டாரகள்.

3. சொந்த நாட்டில் தோன்றிய மகாபுருஷர்களையும் , மகாத்மாக்களையும், சமூக சேவகர்களையும் தலவைர்களயும் ஏளனம் செய்வார்கள் . ஆனால் சீனாவின் தலைவரே என் தலைவர், பேராசான் மார்க்ஸ் , அஞ்சாநெஞ்சன் ஸ்டாலின் என்று வரலாறு தெரியாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

4. தர்மபுரியில் மூன்று பேர் செத்தார்கள், குஜராத்தில் ஆயிரம் பேர் மரணம், தில்லியில் சீக்கியக் கலவரத்தில் 200 பேர் மரணம் என்று துக்கம் தரக் கூடிய நியாயம் கோரி நடக்க வேண்டிய போராட்டத்தை, திசை திருப்பி, இந்த அமைப்பில் நியாயம் கிடைக்காது என்று பிரச்சாரத்தில் இறங்கிவிடுவார்கள். இந்த துயர நிகழ்வுகள் தொடர்ந்த நிகழ்வல்ல, இந்த அமைப்பிலேயே இந்த துய்ரங்களுக்கு பரிகாரம் தேடவும், இந்த துயரங்கள் போல மீண்டும் நடக்காமல் இருக்க நாம் செய்யக்கூடியது பல இருக்கின்றன என்று பேசவே மாட்டார்கள். இந்த அமைப்பை அழித்து தங்கள்து எவரும் எதிர்த்து கேள்வி கேட்கமுடியாத அமைப்புக்கு ஆள் சேர்க்க, கேள்வி கேட்க உரிமையுள்ள அமைப்பை ஒழிக்க திட்டம் போடுவார்கள். ஆனால் ஸ்டாலினின் கீழ் , போல் போட்டின் கீழ் , மாவோவின் கீழ் நடந்த திட்டமிட்ட படுகொலைகளைப் பற்றி , தொடர்ந்து ஆட்சியாளர்களால் மக்கள் வேட்டையாடப் பட்டது பற்றி மூச்சு விட மாட்டார்கள்.

5. வாரிசு அரசியல் என்று கருணாநிதியையும், லாலு பிரசாதைட்யும் தூற்றுவார்கள். ஆனால் மாஓ தன் மனைவிக்கு அரசியலில் இடம் அளித்தது பற்றியோ, அதைத் கொடர்ந்து கலாசாரப் புரட்சி வெறியாட்டங்களைப் பற்றியோ எதுவும் பேச மாட்டார்கள். காஸ்ட்ரோ தன் தம்பிக்கு கியூபாவை தாரை வார்ப்பது பற்றியோ, கிம் இல் ஜாங் தன் மகனுக்கு வட கொரியாவைத் தாரை வார்த்தது பற்றியோ பேச மாட்டார்கள்.

6. ஜனநாயக மரபுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு , மக்கள் பிரதிநிதிகளை நாய்கள் பன்றிகள் என்று ஏசிவிட்டு , புதிய ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம் என்ற பெயரில் வேடமிட்டு நாடகமாடுவார்கள்.

7. வாழ்வாதாரம் பறிக்கப் படுகிறது என்று விவசாய மக்களைத் தூண்டிவிட்டு, தொழிற்சாலைகள் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடுவிட்டு, அவர்கள் குலத்தொழிலை விட்டு விலகி படித்து வேறு வேலை தேடிக் கொள்ளும் முயற்சியில் மண்ணை அள்ளிப் போடுவார்கள். ஆனால் இவர்கள் மட்டும் படித்து, பட்டம் பெற்று சொகுசாக இருப்பார்கள்.

கம்யூனிஸ்டுகள் பற்றிய உங்களது கருத்துக்களையும் எழுதுங்கள்.

Sunday, January 13, 2008

பொதுப்புத்தியில் கம்யூனிஸமும் கம்யூனிஸ்டுகளின் திட்டங்களும்.

பொதுப்புத்தியில் கம்யூனிஸமும் கம்யூனிஸ்டுகளின் திட்டங்களும்.

இன்றைக்கு பலரும் தன்னை கம்யூனிஸ்டு என்று குறிப்பிட்டுக்கொள்வதை பார்க்கிறோம். என்ன காரணமாக இருக்கும்? முதலாவது இந்தியாவில் பலரும் கம்யூனிஸத்தை ஆழ்ந்து படித்து, அலசி, பல்வேறு சிந்தனையாளர்களுடன் விவாதித்து, அறிவியல் கண்டுபிடிப்புகளில் அவற்றை உரசிப்பார்த்து கம்யூனிஸமே சிறந்த தத்துவம் என்று கண்டடைந்தவர்கள் அல்ல. அப்படி உரசிப்பார்த்தவர்களில் ஒருவர் கூட கம்யூனிஸ்டாக தொடர்ந்ததும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் அப்படி கம்யூனிஸ கொள்கையை துறந்து வெளியேறியிருக்கின்றனர். கம்யூனிஸ கொள்கையை துறந்த பலர் தீவிர வலதுசாரி என்று சொல்லும் அளவுக்கு திசை திரும்பியவர்களும் உள்ளனர்.

ஆனால், பொதுப்புத்தியில் கம்யூனிஸ்டு என்பவன் ஒரு நல்லவர், அவர் ஏழைகளுக்காக பாடுபடுகிறார், அவர் தொழிலாளர்கள் நல்ல ஊதியம் பெறவேண்டும் என்று போராடுகிறார், வலிமையுள்ள பணக்காரர்களை எதிர்த்து ஒரு ராபின்ஹூட் போல ஏழைகளுக்காக போராடி அவர்களுக்கான உரிமைகளை, பணத்தை நிலத்தை பெற்றுத்தருகிறார் என்ற பிம்பம் இருக்கிறது. இதுதான் கம்யூனிஸ தத்துவம் சொல்கிறது என்றும் பொதுப்புத்தியில் பிம்பம் இருக்கிறது.

இதனாலேயே கலைஞர் கருணாநிதியும், மற்றவர்களும், "இதுதான் கம்யூனிஸ்டு என்றால், நானும் ஒரு கம்யூனிஸ்டுதான்" என்று கூறுகிறார்கள். அவர் கூறுவது சரியானதும் உண்மையானதும் ஆகும்.

பொதுப்புத்தியில் இப்படி ஒரு பிம்பம் இருப்பதால், கம்யூனிஸ்டுகள் வன்முறையை கையில் எடுத்து கொலை, கொள்ளை, ரயில் தண்டவாள கவிழ்ப்பு, பொதுமக்களையும் போலீஸ்காரர்களையும் தாக்கி கொல்லுவது, பெரிய மக்கள்தலைவர்களை கொல்வது, சந்தையில் வெடிகுண்டு வெடிப்பது என்று ஆயிரக்கணக்கான பயங்கரவாத செயல்களை செய்தாலும், இதெல்லாம் ஏழைகளுக்காக, தொழிலாளர்களுக்காக என்ற பொதுபிம்பமும், அதன் ஊடாக, ராபின்ஹூடின் வன்முறையை நியாயப்படுத்தும் தொனியில் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. அப்படி எழுதுபவர்கள் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் தங்களை தாங்களே நம்பிக்கொள்கிறார்கள்.

ஆனால், கம்யூனிஸ கட்சிகளில் உள்ளவர்கள் கலைஞர் கருணாநிதியை கம்யூனிஸ்டு என்று ஒப்புக்கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஏன் சொல்லப்போனால், மற்ற கம்யூனிஸ்டு கட்சியில் உள்ளவர்களை, அவர்கள் கம்யூனிஸ்டு என்று கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கம்யூனிஸ கட்சிகள் ஒரு கல்ட் போன்றவை என்பதற்கு அவைகள் எப்படி கட்சி கட்டுகின்றன என்பதை பார்த்தாலே தெரியும். தாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்துவர்கள், நாங்கள் மட்டுமே சொர்க்கத்துப் போவோம் என்று பேசும் கிறிஸ்துவர்கள் போல, தாங்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லீம்கள், நாங்கள் மட்டுமோ சொர்க்கத்து போவோம் என்று பேசும் முஸ்லீம்கள் போல இவர்களிலும் ஏராளமான பிரிவுகள் உண்டு. தாங்கள் மட்டுமே உண்மையான மார்க்ஸிய கம்யூனிஸத்தை புரிந்துகொண்டுள்ளோம், எங்களால் மட்டுமே உண்மையான கம்யூனிஸ சமுதாயத்தை அமைக்கமுடியும் என்று பிதற்றி மற்றவர்களை வன்முறை மூலம் ஒடுக்கவும் முயல்வதை, முயன்றதை வரலாறு கூறுகிறது.

ஆனால், இன்றைக்கு கலைஞர் கருணாநிதி அவ்வாறு தன்னையும் கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்வது கம்யூனிஸத்துக்கு ஒரு விளம்பரம், அது கம்யூனிஸத்தை புனிதப்பிம்ப இடத்தில் உட்கார வைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். அதனால், போர்த்தந்திர முறையில் திமுகவினரை அனுசரித்தும், திமுகவில் இருப்பவர்களை தங்கள் கட்சிக்குள் இழுப்பதற்காகவும், அதனை பயன்படுத்திக்கொள்வார்கள். இதுதான் கம்யூனிஸ்டுகளின் இரட்டை நாக்கு.

கம்யூனிஸ்டுகள் உலகெங்கும் ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அது என்னவென்று பார்த்தோமானால், அதன் மூலம் யார் பயன்பெறுவார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

அது திட்டமிட்ட பொருளாதாரம். அதாவது அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள், எந்த பொருளை எந்த தொழிற்சாலை எவ்வளவு தயாரிக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள். அதனை மக்கள் உற்பத்தி செய்யவேண்டும். அவ்வளவுதான். ஒரு மனிதனுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்கக்கூடாது. அவன் ஒரு பொருளை தயாரித்து மற்றவர்களிடம் விற்றால் அது தடைசெய்யப்படும். இதுதான் சோசலிஸ கட்டுமானம்.

இது எவ்வளவு பெரிய சீரழிவை உலகெங்கும் கம்யூனிஸ அமைப்புக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு கொண்டுவந்தது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுதான் கம்யூனிஸம். இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கலைஞரிடம் கேட்டுப்பாருங்கள். இல்லை என்று சொல்லிவிடுவார்.

இந்த கம்யூனிஸ சோசலிஸ அமைப்பின் மூலம் பலனடைவது யார்? கம்யூனிஸ்டு கட்சியிலும், மேல்மட்ட குழுவிலும், போலிட்பரோவிலும் உட்கார்ந்திருக்கும் அதிகார வர்க்கம் மட்டுமே இதன் மூலம் பலனடையும். மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிமைகள். எதிர்த்தால், வர்க்க எதிரி. ஒத்துழைக்கவில்லை என்றால் பிற்போக்குக்காரன். இந்த அதிகார வர்க்கத்தின் கீழ் அடக்குமுறையில் இருக்க முடியாது என்று தொழிலாளர்கள் தனியே தொழிற்சங்கம் வைக்க முடியாது. ஏதேனும் ஒரு அதிகாரி கிறுக்குத்தனமாக ஆணையிட்டு எத்தனையோ பொதுமக்கள் அழிந்தாலும், அது "ஆம்லெட் செய்யவேண்டுமென்றால், முட்டைகளை உடைத்துத்தான் ஆகவேண்டும்" என்று உதாசீனம் செய்யப்பட்டுவிடும். இதுதான் கம்யூனிஸம்.


மனிதனுக்கு கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை அத்தியாவசியமானவை. என்னுடைய கருத்துக்களை சொல்லவும், என்னுடைய நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் எனக்கு சுதந்திரம் வேண்டும். இரண்டையுமே முழுதாக மறுக்கிறது கம்யூனிஸம்.

கம்யூனிஸத்தை குப்பை என்று ஒதுக்க, கம்யூனிஸம் பற்றிய ஆழ்ந்த அறிவோ அல்லது பரந்த படிப்போ கூட தேவையில்லை. கம்யூனிஸ்டு நாடுகள் செய்த கூத்துக்கள் தமிழ்நாட்டில் பரவலாக தெரிய வந்தாலே போதுமானது. ஆனால், அப்படி பரவலாக தெரிய வரக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால்தான், சோவியத் ஸ்டாலின் பற்றியோ, அல்லது போல்போட் பற்றியோ, மாவோவின் உண்மையான வரலாறோ தமிழில் வந்துவிடக்கூடாது, இந்திய ஊடகங்களில் வந்துவிடக்கூடாது என்று சிரத்தை எடுத்துக்கொண்டு அப்படி யாரேனும் ஏதேனும் ஒரு வரி எழுதிவிட்டால் கூட அந்த பத்திரிக்கை அலுவலகத்தின் முன்னே நின்று ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று பிரச்னை பண்ணுகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ருசி என்பது தமிழ் பழமொழி. சோவியத் ரஷியா, கம்யூனிஸ்ட் சைனா, சிவப்பு கம்போடியா, வியத்நாம், கியூபா என்று உலகெங்கும் இந்த கொள்கை விளைவித்த கொடூரம் தெரிந்திருந்தும், இன்னமும் இதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை கண்டால் பரிதாபமாகவே இருக்கிறது.

கம்யூனிஸம் ஒரு சர்வாதிகார சிந்தனை. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற பெரும்பான்மையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து அவர்களை நசுக்கி சக்கையாய் பிழிந்து ஆள ஒரு சிறு குழு போடும் திட்டம். அதுதான் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளுக்கும் நல்லது என்று அவர்களிடமே பிரச்சாரம் செய்யும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட சிந்தனை.

உண்மையிலேயே கம்யூனிஸ்டுகளுக்கு தொழிலாளர்கள் மீதோ, விவசாயிகள் மீதோ, மக்கள் மீதோ ஏதேனும் நம்பிக்கையோ, பாசமோ உண்டா?
கம்யூனிஸ சிந்தனைகளை ஆழ படிப்பவர்கள் மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் மாவோ போன்றோரின் வரிகளில் விவசாயிகள் மீது எப்படிப்பட்ட காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை படித்து திடுக்கிடலாம். தொழிலாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. மெத்த படித்த நாம்தான் அவர்களின் உள்ளே புகுந்து அவர்களை திசை திருப்பி அரசாங்கத்தை கவிழ்க்க அவர்களை தூண்டி நாம் ஆட்சியை கைப்பிடிக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை பார்த்து அதிரலாம். இவர்களது பொலிட்பரோவில் எவரும் விவசாயியோ, தொழிலாளரோ, நிலமற்ற கூலியோ கிடையாது. எல்லோரும் பெரிய குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து, துயரத்தின் வாடையே இல்லாமல் வளர்ந்தவர்கள். இது மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோவிலிருந்து இந்தியாவில் ஜோதிபாசு, புத்ததேவ பட்டாச்சாரியா, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ராமமூர்த்தி, வினோத் மிஷ்ரா, நாகபூஷன் பட்நாயக், சிபிஎம்எல்லின் பட்டாச்சாரியா உட்பட அனைவரது பின்புலத்தை பார்த்தாலும் தெரியும். தொழிலாளர்களும், விவசாயிகளும் இவர்கள் ஆட்சிக்கு வர உதவிப்பொருள்களே அன்றி, ஆட்சியில் இருக்கப்போகிறவர்கள் அல்ல. இதனை வான்கார்ட் என்ற ஒரு கருத்தை வைத்து பூசி மொழுகுகிறார்கள். அதாவது இப்படி பணக்கார குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து விவசாயிகளுக்கு உழைப்பவர்கள் வான்கார்ட் என்ற முன்னோடிகளாம். விவசாயிகள் பிற்போக்கானவர்கள், தொழிலாளர்கள் விவரம் பத்தாதவர்கள். இவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும். ஆனால் காங்கிரஸில் காமராஜர் ஆட்சிக்கு வந்ததும், ஜனதாதளத்தில் தேவ கவுடா ஆட்சிக்கு வந்ததும், தொழிலாளராக இருந்து உயர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆட்சிக்கு வந்ததும், தலித்தாக கேரளாவில் பிறந்து ஜனாதிபதியாக உயர்ந்த நாராயணனும், கடற்கரை கிராமத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல்கலாமும், தஞ்சாவூர் கிராமத்தில் பிறந்து தமிழக முதல்வராக உயர்ந்த கலைஞரும் கேவலமானவர்கள். இன்னும் கேட்டால், இவர் தரகு முதலாளி, அவர் அரைகாலனியவாதி, இவர் மடையன், அவர் முட்டாள், இவர் கோமாளி என்று அவதூறு மட்டும் அலுக்காமல் சலைக்காமல் திட்டுவார்கள்.

இன்னும் ஆழமாக பார்த்தோமானால், கம்யூனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாத விஷயங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்குள் ஒரு சிலரால் திட்டமாக வகுக்கப்படுகின்றன. இவை உள்கட்சி ஆவணங்கள் என்று அவர்களாலேயே அழைக்கப்படுகின்றன. இங்கு, கம்யூனிஸ்டு கட்சி தற்போது எந்த போர்த்தந்திர முறைகளை பயன்படுத்தி மக்கள் நடுவே பிரச்சாரம் செய்யவேண்டும், மக்களை உள்ளே இழுக்கவேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகின்றன. இவைகள் கம்யுனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாதவை. மக்களை நம்புவோம், மக்களுக்காகவே போராட்டம் என்றெல்லாம் பிதற்றும் கம்யூனிஸ்டுகள் மக்களை நம்பி இந்த ஆவணங்களை வெளியே விட வேண்டியதுதானே? விட மாட்டார்கள். இதற்காகத்தான் ஒரு சில பிரச்சார போர்தந்திர உத்திகள் உருவாக்கப்படுகின்றன.

பிரச்சார உத்திக்கு ஒரு உதாரணமும், போர்தந்திர உத்திக்கு ஒரு உதாரணமும் தருகிறேன்.

1) பெரியார் இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்த கம்யூனிஸ்டுகள் இன்று பெரியாரை அரவணைத்துக்கொள்வது. தற்போது, பார்ப்பனர்களது பூணூலை அறுக்கிறேன் என்று கிளம்பி திராவிட கழகத்தினரை விட தீவிரமாக பார்ப்பன எதிர்ப்பு கொண்டவர்கள் தாங்கள் என்று காட்டிக்கொண்டு திராவிட கழகத்தில் உள்ள இளைஞர்களை கவரும் திட்டம்.

2) சாதாரணமாக மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக ஊர்வலம் சென்றாலோ அல்லது கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றாலோ, அதன் நடுவே ஊடுருவி இருந்துகொண்டு அரசாங்கத்து ஊழியர்களையும், போலீஸையும் ஆயுதங்கள் மூலம் தாக்குவது. இதன் மூலம், போலீஸ் திருப்பி தாக்குவதன் மூலம் பொதுமக்களை போலீஸ் தாக்க வைப்பது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிலிருந்து இளைஞர்களை தங்களது ஆயுத புரட்சிக்கு அழைத்துக்கொள்வது.

இது போன்ற கேவலமான உத்திகள் கட்சியின் உள்ளே பொலிட்பரோ என்னும் கும்பலால் திட்டமிடப்படுகின்றன. இது போன்ற பல்வேறு திட்டங்கள் இவற்றின் ஆவணங்களில் காணலாம். இந்த கட்சிகளுக்கு எங்கே யாரிடமிருந்து பணம் வருகிறது போன்றவைகளிலிருந்து ஆயிரக்கணக்கான விஷயங்கள் இந்த உள்கட்சி ஆவணங்களில் உள்ளன.

கம்யூனிஸ்டுகள் மட்டுமே தொழிலாளர்களுக்காக உழைக்கிறார்கள், அல்லது கம்யூனிஸ்டுகள் மட்டுமே விவசாயிகளுக்காக உழைக்கிறார்கள், ஏழைகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று மக்களுக்கு தோன்றவேண்டும் என்பதற்காக மிகவும் சிரத்தை எடுத்து, அப்படி தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக, ஏழைகளுக்காக பாடுபடுபவர்களை அவதூறு செய்வதும், அவர்களை கேவலப்படுத்துவதையும் ஒரு முக்கியமான தொழிலாகவே கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள்.

ஆனால், கம்யூனிஸ்டுகளை அவ்வாறு திரும்பி அவதூறு செய்ய யாரும் விரும்புவதில்லை என்பதால், இவர்கள் தூற்றுவது மட்டுமே நிலைத்துவிடுகிறது.

இதனால்தான் ஏழைகளுக்கும் நிராதரவானவர்களுக்கும் உழைத்த, உழைக்கின்ற அன்னை தெரசா, ராமகிருஷ்ண மடம், திமுக அதிமுக தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸம் சாராத விவசாயிகள் சங்கங்கள் ஆகியவை இவர்களால் அவதூறு செய்யப்படுகின்றன.

உண்மையிலேயே மக்களுக்கு நலம் செய்யக்கூடிய பல திட்டங்கள் கம்யூனிஸ்டுகளால் அவதூறு செய்யப்படுகின்றன. இருக்கும் சமூக சூழ்நிலையிலேயே நாம் நன்றாக வாழ்ந்துவிட முடியும் என்று பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் நினைப்பது கம்யூனிஸ்டுகளுக்கு ஆபத்தானது. ஆகவே, அவர்கள் தற்கால சூழ்நிலை, சமூக நல திட்டங்கள், மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஜனநாயக ரீதியில் வாக்குக்களை பெற்று ஆட்சி வரவும், மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயங்களை செய்ய முனைகிற கட்சிகள் தொடர்ந்து அவதூறு செய்யப்படுகின்றன. அவர்களது குடும்ப விஷயங்கள், அவர்களது தனிமனித விஷயங்கள் (உதாரணம் -சரத்குமார் மது அருந்துபவர்) போன்ற விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்பட்டு ஜனநாயக அரசியல்வாதிகள் மீது வெறுப்பு மக்களிடையே வளர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ பிதாமகர்களான ஸ்டாலின், மார்க்ஸ், லெனின், மாவோ, போல்போட், கிம் இல் ஜுங் (இவர்கள் மது அருந்தமாட்டார்களா?) போன்ற அசிங்கங்கள் கையை தூக்கி போஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் சொன்னதெல்லாம் வேதவாக்கு, அவர்கள் உலகமகா புனிதர்கள் என்பது போல எழுதப்படுகின்றன.

நாம் இவர்களும் ஒரு கட்சியினர் என்று நினைக்கிறோம். அதனால், இவர்களது கருத்துக்களை அனுமதிக்கிறோம். இவர்கள் மற்ற கட்சியினரை அவதூறு செய்வதையும், எல்லா கட்சியினரும் அவதூறு செய்கிறார்கள் அதே போல இவர்களும் செய்கிறார்கள் என்று அனுமதிக்கிறோம். இவர்கள் விளிம்புநிலையில் அரசியல் செய்பவர்களாக இருப்பதால், இவர்களை நாம் பொருட்டாக மதித்து பதிலும் சொல்வதில்லை. மற்ற கட்சியினரும் இவர்களுக்கு பதில் சொல்லி இவர்களை பெரிய ஆளாக ஆக்க விரும்புவதில்லை.

யாரும் இவர்களுக்கு பதில் சொல்வதில்லை என்பதால், தாங்கள் சொல்வதற்கு எவனாலும் பதில் சொல்ல முடியாது என்று இவர்களாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள். (ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் என் பதில் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள். உண்மையிலேயே அதிமுகவினரும் திமுகவினரும் இவர்களது கொள்கையை ஆராய்ந்து கிண்டினால் இரண்டு நாள் தாங்குவார்களா?) இளையதாக முள்மரம் கொள்க என்று அய்யன் வள்ளுவன் வாக்கு. அதனால், வளரும்போதே, இந்த முள் மரத்தை வேரோடு பிடுங்கிவிடவேண்டும் என்று இந்த கட்டுரைகளை எழுதுகிறேன்.

Saturday, January 12, 2008

மக்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கழகம் துவக்கம்

மக்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கழகம்
People's Anti Communism League

இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் எண்ணற்ற துயரை கொண்டுவந்த இந்த கம்யூனிஸ சிந்தனை, "மக்கள் போராட்டம்", "தொழிலாளர்கள் உரிமை", "எதேச்சதிகார எதிர்ப்பு", "பாஸிஸ எதிர்ப்பு", "புதிய ஜனநாயகம்" போன்ற வார்த்தை ஜாலங்களால் மக்களிடம் ஆதரவு தேட முயல்கிறது.

இதுவரை நடந்த வரலாற்றை எடுத்து பார்க்கும்போது,
மக்கள் போராட்டம் என்ற பெயரில் மக்களை போராட வைத்து இறுதியில் மக்களை அடிப்படை தேவைகளுக்கே போராட வைத்துவிட்டதை பார்க்கிறோம்.

தொழிலாளர்கள் உரிமை என்று தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு தேடி ஆட்சிக்கு வந்த பின்னால், தொழிலாளர்களுக்கு முதலீட்டிய அமைப்பில் இருந்த ஒரு சில உரிமைகள் கூட பறிக்கப்பட்டு அடிமைகள் போல ஆக்கப்பட்டதை வரலாறு சொல்கிறது.

பாஸிஸ எதிர்ப்பு என்ற பெயரில் மக்களிடம் வார்த்தை ஜாலம் காட்டி மக்களை தங்கள் பின்னால் வரவழைத்த பின்னால், தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை "மக்கள்" பெயரிலேயே கடுமையாக ஒடுக்கி பாஸிஸ அமைப்பையே இவர்கள் உருவாக்கினர், அதன் பெயரிலேயே எண்ணற்ற கொலைகளை செய்தனர் என்பதையும் பார்க்கிறோம்.

எதேச்சதிகார எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னால், மற்ற நாடுகளை எவ்வளவு கீழ்த்தரமாகவும் சுரண்டல் முறையிலும் அடிமைகள் போல நடத்தினர் என்பதனை சோவியத் யூனியன் யுக்ரேன் மற்றும் இதர இனத்தவரை நடத்தியதையும் சீன கம்யூனிஸ்டுகள் திபெத் கம்போடியா வியத்நாம் ஆகிய நாடுகளை நடத்தியதையும், நடத்துவதையும் இன்றும் தனது விஷக்கரங்களை மற்ற நாடுகள் மீது வீசுவதையும் பார்க்கிறோம்.

இன்றும் தமிழ்நாட்டில் புதிய ஜனநாயகம் என்று ஆளை ஏமாற்றும் முயற்சிகள் நடந்துவருகின்றன. எந்த கம்யூனிஸ, சோசலிஸ நாட்டில் ஜனநாயகம் இருந்திருக்கிறது? புதிய ஜனநாயகம் என்பது ஜார்ஜ் ஆர்வெல் சொல்வது போல நேர் எதிரான பொருளை கொண்டது. இவர்களது ஜனநாயகத்தில் யாரும் ஓட்டுப்பொறுக்க மாட்டார்கள். ஓட்டு இருந்தால்தானே பொறுக்குவதற்கு? தங்களது ஜனநாயக விரோத போக்கை இவ்வளவு வெளிப்படையாக சொன்ன பின்னாலும், இவர்களை ஜனநாயகவாதிகள் என்று யார் அழைப்பார்கள்?

என்னுடைய இன்னொரு பக்கத்தில், கம்யூனிஸ கொள்கை ஆரம்பம் முதலே தவறான கருத்துக்களால், தவறான சிந்தனைகள் மூலம் உருவான தவறான கொள்கை என்பதை காட்டியிருக்கிறேன்.

விவாதிக்க வந்த அனைத்து கம்யூனிஸ்டுகளும் தோல்வியடைந்து பின்னால், தோல்வி அடைந்தோம் என்று உணர்ந்ததும் வெறும் அவதூறில் இறங்கினர்.

தனி மரம் தோப்பாகாது என்பதன் காரணமாக, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு பரந்த இயக்கமாக இந்த மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்பதன் காரணமாகவும் எல்லா தரப்பு மக்களையும் இங்கே அழைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள். நீங்கள் இந்த பதிவில் இணைய வேண்டும் என்பது என் அவா.

கம்யூனிஸ்டுகளது ஏ.கே.47களுடன் நாம் போராட முடியாது. ஆனால், அவர்களது தவறான கருத்துக்களுடன் போராட முடியும்.

அவர்கள் கொண்டுவரும் அபத்தமான கட்டுரைகளை கட்டுடைத்து அவர்களுக்கே காட்டுவோம்.

இதன் பின்னால் போய்விடக்கூடிய அப்பாவி இளைஞர்களை காப்பாற்றி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் அரணாய் விளங்குவோம்.

நீங்கள் திமுக ஆதரவாளராக இருக்கலாம், அதிமுக ஆதரவாளராக இருக்கலாம், காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கலாம், பாரதிய ஜனதா ஆதரவாளராக இருக்கலாம், அல்லது முன்னாள் கம்யூனிஸ்டாக இருக்கலாம்.

நாம் எல்லோரும் மற்றவர்களது ஜனநாயக உரிமைகளை மதிப்பவர்கள். மக்களது ஓட்டுக்களை, அவர்களது தேர்வுகளை மதிப்பவர்கள். மக்கள் ஓட்டுப்போடும் தேர்தலில் தோற்றால், அவர்களது எண்ணத்துக்கு செவி சாய்த்து மாற்றுகட்சியினர் பதவியில் இருக்கவும், அவர்கள் தங்களது செயல்திட்டங்களை நடத்தவும் அனுமதிப்பவர்கள். மாற்றுகட்சியினரது திட்டங்களில் குறை இருப்பதாக நாம் கருதினால் அந்த குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள். அதே போல நமது செயல்திட்டங்களில் குறை இருந்தால், மாற்றுகட்சியினர் நம்மைப் பற்றி குறை சொல்லவும் ஜனநாயக ரீதியில் அனுமதிப்பவர்கள்.

ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படி அல்ல. தங்களது கருத்து ஒன்றே சரி. மற்றவர்கள் கருத்து அனைத்தும் தவறு. அதுமட்டுமல்ல, தங்களை தவிர வேறொருவரும் மக்களிடம் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் கொண்டவர்கள். இதனால் தான் அவர்களது ஆட்சிகள் உலகம் முழுவதும் சர்வாதிகாரத்தனம் கொண்டிருந்தன. அதனையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வார்த்தைஜாலத்தில் மறைத்தவர்கள்.

தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் இந்த கம்யூனிஸ்டுகள் ஊடுருவி தங்களது ஜனநாயக எதிர்ப்பு பிரச்சாரத்தையும், பயங்கரவாத பிரச்சாரத்தையும் செய்துவருகின்றனர். தங்களது பயங்கரவாத செயல்களை வார்த்தைஜாலங்களில் மறைத்து நியாயப்படுத்தியும் வருகின்றனர். அதுமட்டுமல்ல, இவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் பயங்கரவாதம் என்று கூசாமல் சொல்லவும் நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.

இவர்களது செயல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி இந்த கொள்கை குப்பை, ஜனநாயக விரோத, மக்கள் விரோத கொள்கை என்பதனை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

வாருங்கள்.
--
ஸோலார்விண்ட் என்ற நண்பர் கருத்துக்கு ஏற்ப பெயரை மாற்றியுள்ளேன்.
நன்றி